சனி, மார்ச் 03, 2012

ஆசரிப்பு கூடாரம் - எப்படிபட்டவன் ஊழியத்திற்கு உரியவன் - பாகம் 4


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரிய தேவனுடைய பிள்ளைகளே , ஆண்டவர் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் .  ஆசரிப்பு கூடாரத்தை குறித்து நாம் தியானித்து வருகிறோம் .  இந்த பகுதியில் எப்படிபட்டவன் ஊழியதிர்க்குரியவன் என்பதை நாம் சிந்திப்போம் .....



ஊழியன் அழைக்கப்பட்டு இருக்கவேண்டும் :-

எபி 5 : 4 சொல்லுகிறது , " ஆரோனை போல தேவனால் அழைக்கப்பட்டால் ஒழிய ஒருவனும் இந்த கனமான ஊழியத்திற்கு தானாய் ஏற்படுவதில்லை " என்று .  ஆம்  யாத் 4 ; 16 , 17 வாசித்து பாருங்கள் , தேவன் ஆரோனை ஊழியத்திற்கு அழைத்ததை நாம் அறிந்து கொள்ளமுடியும் .

கர்த்தருடைய ஊழியம் என்பது சாதாரண வேலை அல்ல . கர்த்தருடைய ஊழியதிர்க்கென்று விசேஷித்த , தெளிவான அழைப்பு வேண்டும் .  பேதுருவை கர்த்தர் ஊழியத்திற்கு அழைத்தார் ( மத் 4 : 18 , 19 ).  பவுலுக்கு நிச்சயமான அழைப்பை கொடுத்தார் ( அப்போ 9 : 15 மற்றும் 1 திமோ 1 : 12 ). அப்படியே ஊழியதிர்க்காய் புறப்படுகிறவர்களுக்கு தெளிவான அழைப்பு வேண்டும் . அழைப்பிலாதவர் ஊழியத்தில் நிலைநிற்க முடியாது .



ஊழியன் பிரதிஷ்டை உள்ளவனாய் இருக்கவேண்டும் :-

லேவியருக்கு நல்ல பிரதிஷ்டை இருந்தது . கர்த்தருடைய பட்சத்தில் நிற்கிறவன் யார் என்ற கேள்வி வந்தவுடன் நாங்கள் இருக்கிறோம் என்று கர்த்தருடைய பட்சம் சேர்ந்தார்கள் .  ஆதலால் தான் சகோதரரில் 3000 பேரை கர்த்தர் பேரில் உள்ள வைராக்கியத்தினால் வெட்டினார்கள் . 

ஏசுவும் சீஷரிடத்தில் யாதொருவன் என்னிடம் வந்து தன் தகப்பனையும் , தாயையும் , மனைவியையும்  , பிள்ளைகளையும் , சகோதரரையும் , சகோதரிகளையும் , ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாய் இருக்கமாட்டான் என்றார் ( மாற் 14 ; 26 ) .  அப்படி எனில் , என்ன அர்த்தம் ...? ஊழியன் கர்த்தர் மேல் வைராகியமுடையவனாய் இருக்கவேண்டும் . அப்படிப்பட்ட பிரதிஷ்டை இல்லாமல் ஊழியம் செய்யமுடியாது .



ஊழியன் சுதந்திரமில்லாதவன் :

இஸ்ரவேலரில் 12 கோத்திரத்தாருக்கும் கானானில் சென்றதும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது .  ஆனால் லேவி கோத்திரதுக்கோ சுதந்திரம் கொடுக்கப்படவில்லை  ( உபா 18 ; 1 , எண்ணா 18 : 23 ).  லேவியரின் சுதந்திரம் கர்த்தரே ( எண்ணா 18 : 20 ). பன்னிரண்டு கோத்திரத்தாரும் தங்களுக்குள்ள எல்லாவற்றிலும் இருந்து தசம பாகத்தை கர்த்தருக்கு கொடுக்கவேண்டும்  ( எண்ணா 18 : 21 ) . லேவியரோ கர்த்தருக்கு உரிய எல்லாவற்றையும் அனுபவித்து கொள்ளவேண்டும் . அவற்றை விற்கவோ , மாற்றவோ செய்யலாகாது .... ( எசே 48 : 14 , 18 )

ஆகவே ... புதிய ஏற்பாட்டு ஊழியக்காரனுக்கும் பூமியில் சுதந்திரம் இல்லை . கர்த்தரே அவன் சுதந்திரம் . பேதுரு கர்த்தரால் அழைக்கப்பட்ட போது எல்லாவற்றையும் விட்டு பின் சென்றார் ( மத் 4 ; 20 ) . சீஷர்கள் சாட்சி பகரும் போது நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றினோம் என்கிறார்கள் ( மத் 19 : 27 ,  லூக் 18 : 28 )


 பவுல் தனது அனுபவத்தில் பசியுள்ளவர்களும் ,. நிர்வாணிகளும் , குட்டுண்டவர்களும்  , தங்க இடமில்லாதவர்களும் என்கிறார் ( 1 கொரி 4 ; 11 ) . அதோடு தரித்திரர் எனப்பட்டாலும் அநேகரை   ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்கலாகவும் , ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் சகலதையும் உடையவர்களாகவும் எங்களை விளங்க பண்ணுகிறோம் என்கிறார் ( II கொரி 6 : 10 , 11 )



ஊழியன் ஜலத்தில் ஸ்நானம் பண்ணி வஸ்திரம் தரிக்கவேண்டும் :-

ஆசாரிய ஊழியம் செய்த ஆரோனும் , அவன் குமாரரும் ஜலத்தில் ஸ்நானம் செய்து வஸ்திரம் தரித்தார்கள்  ( லேவி 8 : 6 , 9 ) . இந்த ஸ்நானம் ஜலத்தில்  ஞானஸ்நானம் எடுத்தல் ஆகும் .  கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் எடுத்தவர்கள் எதனை பேர்களோ அத்தனை பேர்களும் கிறிஸ்துவை தரித்து கொண்டீர்களே  ( கலா 3 ; 27 ). உண்மையான ஊழியன் பழைய மனிதனாகிய பாவ மனிதனை சிலுவையில் அறைந்து , கொன்று ஞானஸ்நானத்திலே  அடக்கம் செய்தவனாகவும் , புதிய மனிதனாகிய கிறிஸ்துவை தரித்து கொண்டவனாய் இருக்கவேண்டும் .


ஆசாரியனுக்கு உரிய வஸ்திரங்களை அணிந்து இருக்கிறவனை கண்டவுடன் எப்படி ஆசாரியன் என்று அறிந்து கொள்ளலாமோ அப்படியே , கிறிஸ்துவை தரித்த ஊழியனின் ஜீவியம் , இவர் இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்பதை அறிவிக்க வேண்டும் . ( யோவா 13 : 35 ) . அதற்க்கு தகுந்தபடி எவ்விதத்திலும் குற்றமற்றவர்களாய் விளங்கவேண்டும் ( கொலோ 3 : 10  மற்றும் ரோம 13 : 14 )



ஆசாரியன் அபிஷேகம் பண்ணப்படவேண்டும்  :-

பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒருவன் ராஜாவாக வேண்டுமானாலும்  ( I ராஜா 19 : 15 )  , தீர்க்கதரிசியாக வேண்டுமானாலும் ( I ராஜா 19 : 16 ) , ஆசாரியனாக வேண்டுமானாலும் ( லேவி 8 : 12 )  தைலத்தால் அபிஷேகம் பண்ணப்படவேண்டும் .  இந்த அபிஷேகம் எழுத்தின் படி உள்ள அபிஷேகம் .  ஆசாரியனை  தைலத்தால் அபிஷேகம் செய்தவுடன் ஆசாரிய ஊழியத்திற்காக நியமிக்கப்பட்டவன் என தெரியப்பட்டு ஊழியம் செய்கிறான் .  அபிஷேகம் பண்ணபடாதவனுக்கு ஊழியத்தில் உரிமை இல்லை .  அப்படி மீறி ஊழியத்தில் பிரவேசிக்கிறவன் கொல்லப்படுவான்  ( எண்ணா 3 : 10 )



புதிய ஏற்பாட்டு ஊழியமோ ஆவிக்குரிய ஊழியம் . அபிசேகமும் ஆவிக்குரிய அபிஷேகம் . இயேசு மாமிசத்தில் ஜீவித வேளை சீஷர்களை தெரிந்து எடுத்து , மூன்றரை வருடம் கூடவே வைத்து படிப்பித்தார் . சீஷர்கள் ரட்சிக்கப்பட்டு இருந்தார்கள் ( லுக் 10 : 20 ) . ஆனால் அபிஷேகம் பண்ணப்படவில்லை . அபிஷேகம் ஊழியத்திற்கு தேவையும் , முக்கியமும் ஆனபடியால் அபிசேகத்தை பெற்றுகொள்ளுமட்டும் எருசலேமை விட்டு போகாதிருங்கள் , பிதாவின் வாக்குதததிற்க்காக காத்திருங்கள் என்று இயேசு கட்டளை கொடுத்தார் ( லூக் 24 : 49 , அப்போ 1 ; 4 , 5 ).  சீஷர்கள் கர்த்தருடைய கட்டளைப்படி ஜெபத்திலும்  , வேண்டுதலிலும் தரித்து இருந்தார்கள் ( அப்போ 1 : 14 , 15 ) . பெந்தேகோஸ்தே நாளில் காத்திருந்த சீஷர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள்  ( அப்போ 2 ; 1 - 4 ) . ஆதலால் ஊழியம் செய்யவேண்டியவன் அபிஷேகம் பெற்று இருக்கவேண்டும் ..



------தொடரும்  -----------------அடுத்த பகுதியில்  " ஆசாரியன்  ஜீவிக்கவேண்டிய மாதிரி "  குறித்து சிந்திக்கும் வரை கர்த்தரின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக ............ஆமென் ...!