புதன், அக்டோபர் 26, 2011

வெளிச்சத்துக்காக காத்திருக்கிறோம்

பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.  இன்றும் பரிசுத்த வேதத்தில் இருந்து ஒரு நல்ல வேத பகுதியை நாம் தியானிக்கலாம்    ஏசாயா  59 : 9 ம் வசனம் சொல்லுகிறது . " வெளிச்சத்துக்கு காத்திருந்தோம்  , இதோ இருள் ;  பிரகாசத்துக்கு காந்திருந்தோம் ;  ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம் .."


அநேகம் பேரை அன்றாடம் வாழ்க்கையில் பார்க்கும் போதும் ,  அவர்களிடத்தில் பேசும்போதும் ஒரு காரியத்தை சொல்ல கேட்டிருக்கிறேன் .  நான் மிகவும் ஒரு நல்ல வாழ்வை விரும்புகிறேன் .. ஆனால் என் வாழ்க்கை முழுவதும் அந்தகாரமாகவே ( இருளாகவே ) இருக்கிறது என்று .   உண்மையில் இருதயத்தில் அல்லது வாழ்வில் இருள் வந்துவிட்டால் அந்த வாழ்வில் சந்தோசம் இருக்காது ,  நல்ல சமாதானம் இருக்காது .    இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான் (  யோவான் 12  : 35 )  என்றும்  ,    இருளில் கொள்ளைநோய் நடமாடும் ( சங்கீ 91 : 6 ) என்றும் பல இடங்களில் இருளின் வாழ்க்கையை குறித்து பரிசுத்த வேதம் சொல்லுகிறது .   

இந்த இருள் மனிதனுக்குள் வருவதற்கு காரணம் என்னவென்று தெரியாத நண்பர்கள் அநேகர் உண்டு.   பாருங்கள்  சத்துரு என்னை இருளில் இருக்கப் பண்ணுகிறான் ( சங்கீ 143  : 3 ) ,     மூடன் ( அறியாமை ) இருளில் நடக்கிறான் ( பிரசங்கி 2 :  14 ) ,   துன்மார்க்கர் இருளில் மௌனமாவார்கள்  ( 1 சாமு 2 : 9 ) என்று பரிசுத்த வேதம் ஏன் மனிதனுக்கு இருள் உண்டாகிறது என போதிக்கிறது.  

பிரியமானவர்களே  , நாம் செய்கிற சில காரியங்கள் தேவனுடைய பார்வையில் ஆகாததாய் இருக்கும்போதும்  , பிசாசின் போராட்டம் அதிகமாகும் போதும்  ,  நம்முடைய அறியாமையில் நாம் செய்கிற சில பாவங்கள் நிமித்தமும் இருளான /  அந்தகாரமான வாழ்க்கைக்குள் நாம் கடந்துவருகிறோம் .  அதனுடைய பாதைகள் எவ்வளவு வேதனை நிறைந்து காணப்படுகிறது என்பதை அறிந்தும் இருக்கிறோம்.    இந்த இருளில் இருக்கும் அநேக ஜனங்கள் ஒரு வெளிச்சத்துக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள் அது மாதிரம்மல்ல அந்த வெளிச்சத்தை கண்டுகொள்ள முயற்சி செய்கிறார்கள்.
ஒரு எளிய காரியத்தை தான் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் .  இந்த இருள் வெளிச்சமாக மாற வேண்டுமெனில் வெளிச்சத்தை கொடுக்கிற இடத்தை நாம் கண்டுபிடிக்கவேண்டும்.    பரிசுத்த வேதம் யோவான் 1  : 9 ல் சொல்லுகிறது ,  "  உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி " .   ஆமென் .    இந்த உலகத்திலே மனிதனாய் பிறந்த ஆண்டவர் ஏசுவே இந்த உலகத்தில் வெளிச்சமாயிருக்கிறார்.    யோவான் 1 : 4 ம் வசனம் சொல்லுகிறது  , " அவருக்குள் ஜீவன் இருந்தது , அந்த ஜீவன் மனுசருக்கு ஒளியாயிருந்தது " 

இருளிலே கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என மீகா 7 : 8  ,   கர்த்தர் என இருளை வெளிச்சமாக்குகிறவர் என 2 சாமு 22 : 29  மற்றும் சங்கீ 18 : 28  ,  என்னை பின்பற்றுபவன் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்  என யோவான் 8 : 12  எனவும் பரிசுத்த வேதம் சொல்லுகிறது .

பிரியமானவர்களே இருளின் ( பிசாசின் ) அதிகாரத்தில் இருந்து நம்மை விடிவிக்கும் படியாகவே ஆண்டவர் இயேசு நமக்காக சிலுவையில் தம் ஜீவனியும் தந்தார்.   நாம் நம்முடைய பாவங்களை அவரிடத்தில் அறிக்கையிட்டு அவரை நம் உள்ளத்தில் ஏற்றுகொண்டால் நம்முடைய இருளான வாழ்வை அவர் மாற்றிபோட்டு ,  இருளின் அதிகாரங்களுக்கு நம்மை அவர் விலக்கி ,  வெளிச்சத்தின் பிள்ளைகளாக நம்மை மாற்றி நம்முடைய பாவ ,  சாப ,  வியாதி கட்டுகளை அறுத்து நம்மை உயர்த்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .


ஒரு சிறிய ஜெபத்தை செய்வோமா ...?  

எங்கள் அன்புள்ள பரலோக பிதாவே  ,  இந்த வேளைக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம் .   எங்கள் அந்தகாரங்களினால் நாங்கள் படுகிற வேதனைகளை நீர் அறிந்திருக்கிறீர் .  எங்கள் பாவங்களையும் ,  சாபங்களையும் தயை கூர்ந்து நீர் மன்னித்து  , எங்களை ரட்சியும் .  நீர் இந்த உலகத்தின் ரட்சகர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம் .  நீர் எங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் இப்பொழுது இருக்கிறீர் என்பதையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் .  பாவத்தின் மூலமாக ,  சாபத்தின் மூலமாக எங்கள் வாழ்வில் உள்ள எல்லா போராட்டங்களையும்  , வியாதிகளையும்  , சமாதான சீர்கேடுகளையும் எங்களை விட்டு அகற்றி வ்ளிச்சத்தின் ஆசீர்வாதங்களினால் எங்களை நிரப்பும் என கெஞ்சி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் பிதாவே ... ஆமென்..

பிரியமானவர்களே .... கர்த்தர் உங்கள் ஜெபத்தை கேட்டு உள்ளார் .  உங்களை அவர் ஆசீர்வதிப்பார் .   ஆமென்.


1 கருத்து: